ஏழைகளின் பட்டியலுக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுவாக வீட்டுவசதி அதிகார சபையின் நிலக் கொள்கையின்படி, நாட்டில் வாழும் குறைந்த வருமானம் பெறும் ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு ஒரு காணி மாத்திரமே வழங்க முடியும் என்ற கடுமையான சட்ட விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஆனால், கடந்த 1999 ஆம் ஆண்டில் அப்போதைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு ஏக்கர் அரச நிலம் தாராளமாக வழங்கப்பட்டுள்ளது எனச் சுதத் பலகல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
"அவர் ஒன்றும் காணி இல்லாத, குறைந்த வருமானம் பெறும் ஏழை என்று நான் நினைக்கவில்லை" என அவர் சபையில் சாடியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொருளாதார நிலையைக் கேள்விக்குட்படுத்திய அவர், ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அரச நிலங்களைப் பணக்காரர்கள் எவ்வாறு தட்டிச் செல்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டினார்.
அதேபோன்று, மஹிந்தவின் மனைவிக்கும் அவர்களின் ஆட்சிக் காலத்தில், பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தி 'கார்டன் மொண்டிசோரி' என்று கூறப்படும் இடத்துக்கு மற்றொரு பெறுமதிமிக்க அரச நிலம் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், அந்த நிலத்திற்கு மேலதிகமாக, அதனைச் சுற்றியிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான மேலும் சில பகுதிகளும் அவர்களால் அத்துமீறிப் பலாத்காரமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் விதிமுறைகளை மீறி முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அரச நிலங்கள் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுவரை மஹிந்த ராஜபக்ஷ அல்லது மைத்திரிபால சிறிசேன தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.