யாழில் 15 வயது பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம் – சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக இருந்த சம்பவத்தில், அவரது ஒன்றுவிட்ட சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் நடைபெற்றுள்ளது. பாடசாலை மாணவியான 15 வயதுச் சிறுமி, வயிற்று வலி இருப்பதாகத் தாயாரிடம் கூறியதையடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதுதான் அவர் ஏழரை மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தாயார், மாணவியை உடனடியாக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பொலிசார் மாணவியைக் கைது செய்து, வைத்திய பரிசோதனைக்குப் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணையின் போது, தனது தாயாரின் சகோதரியின் மகனான (ஒன்றுவிட்ட சகோதரன்) ஒருவரும், மற்றொரு நபரும் தன்னை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக மாணவி தெரிவித்துள்ளார். மாணவி வழங்கிய தகவலின் அடிப்படையில், 17 மற்றும் 20 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தற்போது உரிய மருத்துவப் பராமரிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவிக்கையில், "பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைப் பிரசவித்த பின்னர், பிறக்கும் குழந்தைக்கு டி.என்.ஏ. (DNA) பரிசோதனை செய்யப்படும். அந்த அறிவியல் பூர்வ அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகளுக்குக் கடுமையான மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் பரபரப்பையும், பெற்றோரிடையே பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.