மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் 48 மணி நேரத்தில் தோன்றும் எச்சரிக்கை அறிகுறிகள்
மாரடைப்பு என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நோயாகும். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது திடீரென ஏற்படுவதில்லை. இதற்கு முன்பே உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை காட்டும். இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து மருத்துவரை அணுகினால் மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் குறிப்பாக 48 மணி நேரத்திற்குள் உடலில் அதிக சோர்வு உணர்வு தோன்றும். வழக்கத்தை விட உடல் பலவீனமாகவும், செயல்களில் ஆர்வம் குறைந்ததாகவும் உணரப்படலாம். பலர் இதை சாதாரண களைப்பு என நினைத்து புறக்கணிப்பது பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும்.
இதற்கு கூடுதலாக மார்பு பகுதியில் அசௌகரியம், அழுத்தம் அல்லது வலி போன்ற உணர்வுகள் தோன்றலாம். சிலருக்கு மூச்சுத் திணறல் அல்லது மார்பு இறுக்கம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். இவ்வாறான அறிகுறிகள் அமிலத்தன்மை அல்லது செரிமான கோளாறு என தவறாக புரிந்துகொள்வது பொதுவாக நடைபெறுகிறது. ஆனால் இவை மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்க வாய்ப்பு இருப்பதால் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும்.
மருத்துவ நிபுணர்களின் தகவல்படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு முன்பே உடலில் சில மாற்றங்கள் தென்படும். இத்தகைய அறிகுறிகளை புறக்கணிப்பது உயிருக்கு ஆபத்தை அதிகரிக்கும். எனவே இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பது மிகவும் முக்கியம்.
இதய நோய் அபாயத்தை குறைக்க வாழ்க்கை முறையில் மாற்றம் செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். குறிப்பாக கீரை வகைகள், ப்ரோக்கோலி, மாதுளை, ஆப்பிள், வால்நட்ஸ், பாதாம், முழுதானியங்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் சால்மன் போன்ற உணவுகள் இதய நலனுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. உடல்நலத்தில் ஏற்படும் எச்சரிக்கை அறிகுறிகளை சரியான நேரத்தில் அறிந்து செயல்படுவது மாரடைப்பு அபாயத்தை குறைக்க உதவும்.
