மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா? மருத்துவர் தரும் 'பளிச்' ஆலோசனைகள்!

Published on: 26 Mar 2026, 07:37 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்படும் மூல நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நவீன லேசர் சிகிச்சை மூலம் வலியின்றி குணப்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் டாக்டர் பி. நந்திவர்மன்.

மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா? மருத்துவர் தரும் 'பளிச்' ஆலோசனைகள்!

இந்திய மருத்துவத்தின் தந்தை சுஸ்ருதா கூறியது போல, நம் உணவுப் பழக்கமே நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில், இன்றைய காலகட்டத்தில் பலரையும் வாட்டும் ஒரு முக்கியப் பிரச்சனை மூல நோய் (Piles). இது குறித்து விளக்கும் டாக்டர் நந்திவர்மன், ஆசன வாய்ப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் வீங்கிப் புடைப்பதையே 'மூலம்' என்கிறோம் என்கிறார். 

மலம் கழிக்கக் கட்டுப்படுத்தும் 'ஏனல் குஷன்' எனப்படும் சதைத் துருத்தல்கள், மலச்சிக்கல் காரணமாகக் கீழ்நோக்கிச் சரிந்து மூலக்கட்டியாக மாறுகின்றன. குறிப்பாக, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள், போதிய உடலுழைப்பு இல்லாதவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அறிகுறிகளும் பாதிப்புக்குள்ளாகும் நபர்களும்

மூல நோய் இருப்பதைச் சில முக்கிய அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். மலம் கழிக்கும்போது ஆசன வாயில் கடுமையான வலி ஏற்படுவது, மலத்துடன் கலக்காமல் தனியாகப் புதிய ரத்தம் சொட்டுவது, ஆசன வாயைச் சுற்றி நமைச்சல் அல்லது கட்டி போன்ற உணர்வு ஏற்படுவது போன்றவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். 

இது வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், ஆண்களை விடப் பெண்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் குடிக்காதது மற்றும் முறையற்ற உணவு முறையே இதற்குக் காரணமாக அமைகிறது.

வராமல் தடுப்பதும் குணப்படுத்தும் முறைகளும்

மூல நோயைத் தடுக்கவும், வந்த பின் கட்டுப்படுத்தவும் மிக எளிய வழி 'நார்ச்சத்து' (Fiber) நிறைந்த உணவுகளை உட்கொள்வதே ஆகும். கீரைகள், வாழைத்தண்டு, கொய்யா, பப்பாளி போன்ற நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சேர்த்துக்கொண்டு, அசைவம் மற்றும் அதிகக் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

தினமும் குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். சிகிச்சையைப் பொறுத்தவரை, தற்போது ஆறு வகையான நவீன முறைகள் உள்ளன. அதில் 'செங்கதிர் லேசர் சிகிச்சை' (IRC) முறையானது தையல், ரத்த இழப்பு அல்லது வலி இல்லாமல், நோயாளி மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இன்றியே குணப்படுத்த உதவுகிறது.

மலச்சிக்கலை விரட்ட டாக்டர் பரிந்துரைக்கும் பட்டியல்

மலச்சிக்கலே மூல நோயின் வேர் என்பதால், அதனைத் தவிர்க்க மருத்துவர் சில உணவுகளைப் பரிந்துரைக்கிறார்:

காய்கறிகள்: வெண்டை, முள்ளங்கி, முட்டைக்கோஸ், பீட்ரூட், வாழைத்தண்டு மற்றும் கீரை வகைகள்.

பழங்கள்: கொய்யா, பப்பாளி, பேரீச்சை, ஆரஞ்சு மற்றும் மாதுளை.

தவிர்க்க வேண்டியவை: ஸ்ட்ராங் காபி, டீ, அசைவ உணவுகள் மற்றும் மன உளைச்சல்.

முறையான நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும், எடையைச் சீராகப் பராமரிப்பதும் உங்களை மூல நோயிலிருந்து நிரந்தரமாகப் பாதுகாக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW