வாகன இறக்குமதியை நிறுத்த தீர்மானமா? அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணாண்டோ நேற்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் வாகன இறக்குமதி மீளத் தொடங்குமா அல்லது மீண்டும் நிறுத்தப்படுமா என்ற ஊகங்களுக்கு மத்தியில், தற்போதுவரை இது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் விளக்கினார்.
அதேபோன்று, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் எரிபொருள் விலையை மாற்றுவதற்கு மேலதிக தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். எரிபொருள் விலை மாற்றம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதுவரை அமைச்சரவை மட்டத்திலோ அல்லது வேறு எந்த மட்டத்திலோ இது குறித்து முடிவு எட்டப்படவில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறானதொரு பின்னணியில், நாடாளுமன்றத்தின் எதிர்காலப் பணிகளைத் திட்டமிடுவதற்காகக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.