மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிடுவோருக்கு அதிர்ச்சி: கடுமையாக்கப்படும் புதிய விதிமுறைகள்!

அவுஸ்திரேலியா அரசு சர்வதேச மாணவர் விசா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் இலங்கை மாணவர்களின் விசா நிராகரிப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிடுவோருக்கு அதிர்ச்சி: கடுமையாக்கப்படும் புதிய விதிமுறைகள்!

அவுஸ்திரேலியாவில் கல்வி பயில திட்டமிட்டு இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து சர்வதேச மாணவர் விசா நிராகரிப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

'தி நோட்டிஸர்' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கையிலிருந்து மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 38 சதவீத பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளையும் சேர்ந்த மாணவர்களும் இந்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

2026 பெப்ரவரி மாதத்தில் பல்கலைக்கழக மாணவர் விசா நிராகரிப்பு விகிதம் 32.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த அளவாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இந்த நிராகரிப்பு விகிதம் 15.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மொத்தமாக 34,000 மாணவர் விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலத்தை தவிர்த்து பார்த்தால், இது 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டில் உயர் கல்வி பெற திட்டமிடும் மாணவர்கள் விண்ணப்ப செயல்முறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர