ரீல்ஸ் மூலம் முன்னாள் மனைவியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து கொலை செய்த நபர்!
ஹைதராபாத் வனஸ்தலிபுரத்தில் பிப்ரவரி 18-ஆம் திகதி மதியம் நடந்த ஒரு கொடூரமான பழிவாங்கும் கொலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுனிதாவும் 2022-இல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். விசா தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக இவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை விவாகரத்தில் முடிந்தது. 2024-இல் விவாகரத்து பெற்ற சுனிதா, 2025-இல் வேறொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
தன்னுடைய வேலை பறிபோனதற்கும், தன் தாயாரின் மரணத்திற்கும் சுனிதாவே காரணம் என்று கருதிய மகேஷ், அவரைப் பழிவாங்கத் துடித்துள்ளார். எனினும், சுனிதா தனது கணவருடன் வசிக்கும் முகவரி மகேஷுக்குத் தெரியவில்லை.
இந்நிலையில், சுனிதாவிற்குத் தனது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைச் சமூக வலைதளங்களில் பகிரும் பழக்கம் இருந்துள்ளது. சுனிதா பதிவிடும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வைத்து, அவர் எந்தக் கோவிலுக்குச் செல்கிறார் என்பதை ஆராய்ந்து, அந்தப் பகுதியில் தேடி மகேஷ் அவர் தங்கியிருக்கும் முகவரியைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து பிப்ரவரி 18 அன்று, சுனிதாவின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்த மகேஷ், சுனிதாவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டிய மகேஷை போலீசார் பேசிச் சமாதானப்படுத்தி கைது செய்தனர்.
மகேஷிடம் இருந்து கத்திகள் மற்றும் கதவை வெட்டித் திறக்க அவர் வைத்திருந்த மின்சார ரம்பம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
