எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய காதலன்; 22 வயதுப் பெண் எடுத்த விபரீத முடிவு!

தெலங்கானா மாநிலத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய காதலன்; 22 வயதுப் பெண் எடுத்த விபரீத முடிவு!

"கௌரவமின்றி என்னால் தொடர்ந்து வாழ முடியாது" என தெரிவித்து வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட தெலங்கானாவைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில், எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை வலுக்கட்டாயமாக ஊசி மூலம் செலுத்தி தனது வாழ்க்கையை "அழித்துவிட்டதாக" ஒரு உறவினரைக் குற்றம் சாட்டினார்.

ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான தெலங்கானாவின் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தூரத்து உறவினரான மனோகர் என்பவர் தன் மீது காதல் கொண்டபோது இந்தப் பிரச்சினை தொடங்கியதாகக் கூறினார். ஆரம்பத்தில் அவர் மனோகரின் காதலை நிராகரித்தாலும், பின்னர் அந்த உறவுக்குச் சம்மதித்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தைச் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக மனோகர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

காவலர் பணி நியமனத்திற்கான மருத்துவப் பரிசோதனையின்போது, ​​மனோகருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அந்தப் பெண் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவர்கள் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டதாக அவர் கூறினார். 

இருப்பினும், பின்னர் அவர் மீண்டும் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மருந்து இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், அந்தப் பெண்ணுக்கும் எதுவும் ஆகாது என்றும் உறுதியளித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டில், தனது சகோதரியின் திருமண ஏற்பாடுகளின் போது, ​​அவர்களது உறவையும் இந்தப் பிரச்சினையையும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் எச்.ஐ.வி பரிசோதனை செய்துகொண்டனர். அதில் மனோகருக்குத் தொற்று இருப்பது உறுதியான நிலையில், இவருக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அவரைத் திருமணம் செய்தால் இவரது வாழ்க்கை பாழாகிவிடும் என்று இவரது பெற்றோர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், பிப்ரவரி மாதம், இவருக்குத் வரன் வந்தது, ஆனால் இவரது மாமாவின் மரணம் காரணமாக அது நிறுத்தி வைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, மனோகர் தனது வீட்டிற்கு வந்து வலுக்கட்டாயமாக ஊசி போட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

அதே நாளில் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகத் தனது தோழியிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும், சிலர் தன்னைப் பற்றிப் பொய்யான வதந்திகளைப் பரப்பி, தனது மனநிலையை மேலும் பாதித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அந்தக் காணொளியில், தான் ஏற்கனவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததால், அந்தச் சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக மருத்துவ உதவியை நாடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர