கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்து நாடகம் ஆடிய இளம்பெண் கைது

மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப்படையால் கொலை செய்து கொள்ளை நாடகம் ஆடிய இளம்பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.
கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்து நாடகம் ஆடிய இளம்பெண் கைது

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கணவனை கொலை செய்ய கூலிப்படையை பயன்படுத்தி பின்னர் கொள்ளை சம்பவம் போல நாடகம் ஆடிய இளம்பெண் மற்றும் அவரது ரகசிய காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தார் மாவட்டம், கோண்டிகேடா கிராமத்தைச் சேர்ந்த தேவ்கிருஷ்ணா என்பவரின் மனைவி பிரியங்கா புரோஹித் (27). இவர்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த இரவு, வீட்டில் கணவன்-மனைவி இருந்தபோது, மூன்று பேர் கொண்ட குழு திடீரென வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் இருவரையும் தாக்கி தனித்தனி அறைகளில் அடைத்தனர். பின்னர் தேவ்கிருஷ்ணாவை கடுமையாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக முதலில் கூறப்பட்டது.

மற்றொரு அறையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் இருந்த பிரியங்கா, சத்தமிட்டு உதவி கோரினார். அக்கம்பக்கத்தினர் வந்து சேர்ந்தபோது, கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து கணவனை கொலை செய்ததுடன், நகைகள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேவ்கிருஷ்ணாவின் உடலை மீட்டு விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் கொள்ளை சம்பவத்திற்கான எந்தத் தடயங்களும் கிடைக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து பிரியங்காவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

பிரியங்காவுக்கு கமலேஷ் என்ற நபருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தது தெரியவந்தது. கணவனை அகற்றிவிட்டு காதலனுடன் வாழ திட்டமிட்ட அவர், கூலிப்படையினரை வைத்து இந்த கொலை திட்டத்தை செயல்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் பிரியங்காவும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர