இரவு நேர கொள்ளை: தம்பதியை கத்தி முனையில் மிரட்டிய முகமூடி கும்பல்
அத்துருகிரிய – பொரலுகொட வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றுக்குள், முகமூடி அணிந்த கும்பல் ஒன்று இரவு நேரத்தில் நுழைந்து தம்பதியை கத்தி முனையில் மிரட்டி, சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அத்துருகிரிய பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, சம்பவம் நடந்த நாளில் இரவு 10.30 மணியளவில் குறித்த கும்பல் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளது. அதன் பின்னர் வீட்டில் இருந்த தம்பதியை மிரட்டி மதிப்புமிக்க பொருட்களை கைப்பற்றி தப்பியதாக கூறப்படுகிறது. கொள்ளையிடப்பட்ட பொருட்களில் 13 பவுண் தங்க நகைகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மற்றும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
