இரண்டாம் திருமணம் குறித்து முதன்முறையாக மனந்திறந்த நடிகை
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினி, கமல், சிரஞ்சீவி எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் 'தெறி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது தனது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். அவரது மறைவிற்குப் பிறகு, மீனா இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பல வதந்திகள் பரவி வந்தன.
இந்த வதந்திகள் குறித்து மனம் திறந்துள்ள மீனா, "எனக்கு 2வது திருமணம் என்று பரவும் வதந்திகள் என்னை மிகவும் காயப்படுத்துகின்றன. முன்னால் ஒரு வதந்தி பரவினால் எனக்குத் தெரிய நீண்ட காலம் ஆகும், ஆனால் இப்போது சமூக வலைதளங்களால் அது மிக விரைவாகப் பெரிதாகிவிடுகிறது" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், "நான் ஒரு பெண் செலிபிரிட்டி, சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக, உண்மை என்ன என்று தெரியாமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? கேட்க ஆள் இல்லை என்பதால் இப்படிச் செய்கிறீர்களா? இதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் கோபமாக இருக்கிறது" எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது மீனா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 'திரிஷ்யம் 3' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
