8 மணி நேரம் தூங்கியும் சோர்வு தொடருகிறதா? காரணம் தூக்கத் தரம்தான்!

படுக்கைக்கு முன் அதிகமாக உணவு சாப்பிடுவது செரிமானத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் உடல் முழுமையாக ஓய்வெடுக்க முடியாமல் போகும். இதனால் இரவில் தூக்கக் கோளாறுகள் ஏற்பட்டு காலையில் சோர்வு அதிகரிக்கலாம்.
8 மணி நேரம் தூங்கியும் சோர்வு தொடருகிறதா? காரணம் தூக்கத் தரம்தான்!

தூக்கம் என்பது வெறும் ஓய்வுக்கான நேரம் மட்டும் அல்ல, உடலின் முக்கிய செயல்பாடுகளை சீரமைக்கும் அத்தியாவசிய செயல்முறையாகும். தூங்கும் நேரத்திலும் உடல் ஆற்றலை சேமிப்பது, செல்களை புதுப்பிப்பது, மூளையில் நினைவுகளை ஒழுங்குபடுத்துவது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இதனால் நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சிலர் எட்டு மணி நேரம் முழுமையாக தூங்கினாலும், காலையில் எழுந்ததும் சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் சோம்பல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். மருத்துவர்களின் கருத்துப்படி, இது தூக்கமின்மை காரணமாக மட்டுமல்ல; தூக்கத்தின் தரம் குறைவாக இருப்பதாலேயும் ஏற்படலாம். இரவில் பல முறை விழித்தாலும் அதை உணராமல் இருப்பது தூக்கக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். இதனால் தூங்கிய நேரம் போதுமானதாக இருந்தாலும், உடலுக்கு முழுமையான ஓய்வு கிடைக்காது.

மோசமான தூக்கத்திற்கான முக்கிய அறிகுறிகளில் காலையில் சோர்வாக எழுவது, பகலில் கவனம் குறைவது, மதியம் திடீரென ஆற்றல் குறைதல், காஃபின் இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்க முடியாத நிலை போன்றவை அடங்கும். இரவு நேரங்களில் காஃபின், மது அருந்துதல், கனமான உணவு சாப்பிடுதல் மற்றும் படுக்கையில் மொபைல் பயன்படுத்துதல் போன்ற பழக்கங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கக்கூடும். குறிப்பாக மொபைல் திரைகளில் இருந்து வரும் நீல ஒளி தூக்கத்தை கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியை குறைக்கிறது.

படுக்கைக்கு முன் அதிகமாக உணவு சாப்பிடுவது செரிமானத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பதால் உடல் முழுமையாக ஓய்வெடுக்க முடியாமல் போகும். இதனால் இரவில் தூக்கக் கோளாறுகள் ஏற்பட்டு காலையில் சோர்வு அதிகரிக்கலாம்.

சிறந்த தூக்கத்திற்காக படுக்கைக்கு குறைந்தது 8 மணி நேரத்திற்கு முன் காஃபின் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இரவு உணவை படுக்கைக்கு 3 மணி நேரத்திற்கு முன் முடித்துக்கொள்ள வேண்டும். அதேபோல் மது அருந்துவதைக் குறைத்து, படுக்கையறையை குளிர்ச்சியான மற்றும் இருண்ட சூழலில் வைத்திருப்பது நல்ல தூக்கத்துக்கு உதவும். படுக்கைக்கு செல்லும் முன் மொபைல் மற்றும் பிற திரை சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பதும் முக்கியம்.

இந்த நல்ல பழக்கங்களை பின்பற்றிய பின்னரும் சோர்வு நீடித்தால், தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஓய்வற்ற கால் பிரச்சனை, மன அழுத்தம், மருந்துகளின் தாக்கம் அல்லது உடலில் இரும்புச்சத்து குறைபாடு போன்ற காரணங்கள் இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர