“அது வெறும் ஜாலிதான்” – பாடல் சர்ச்சைக்கு மமிதா பைஜூ விளக்கம்
மலையாள திரையுலகில் இருந்து தென்னிந்திய அளவில் பிரபலமடைந்த நடிகையாக மமிதா பைஜூ திகழ்கிறார். ‘வரதன்’, ‘விக்ருதி’, ‘சூப்பர் சரண்யா’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற அவர், ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார். அந்தப் படத்தில் நாயகியாக நடித்த அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன.
தமிழ் சினிமாவிலும் அவர் தடம் பதித்து, பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது நடிகர் விஜய்யுடன் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ள அவர், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் மமிதா பைஜூ மேடையில் நடனமாடியதுடன், ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எல்லா புகழும்...’ பாடலின் சில வரிகளையும் பாடினார். ஆனால் அவரது குரல் பாடலின் தரத்திற்கு ஏற்ப இல்லையென சில ரசிகர்கள் விமர்சித்து, அதனை வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோக்கள் வைரலாக பரவின.
இதுகுறித்து மமிதா பைஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “இவை எல்லாம் ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்தான்” என்று சிரிப்புடன் பதிலளித்துள்ளார்.
