நீதிமன்றத்தில் வீடியோ எடுத்த பெண்ணுக்கு அபராதம்; கைப்பேசி பறிமுதல்
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் தனது தந்தை சாட்சியமளித்துக் கொண்டிருந்ததை கையடக்கத் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனை கவனித்ததையடுத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன், அவரது கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
அறியாமையால் இச்செயல் இடம்பெற்றதாக பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், கொழும்பு தலைமை நீதவான் அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
மேலும், பதிவு செய்யப்பட்ட காணொளியை உடனடியாக கைப்பேசியில் இருந்து நீக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் நீதவான் எச்சரிக்கை வழங்கியுள்ளார்.
