16 வயதில் இளவரசருடன் கட்டாயத் திருமணம்... பாலியல் துன்புறுத்தல்... 17 ஆண்டுகளுக்குப் பின் மனம் திறந்த மாடல்...
ஒரு ஆண்டுக்குள் அவர் தனது கணவரால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் ரீதியான தண்டனைகளை எதிர்கொண்டதாகத் தெரிவித்து, மலேசியாவை விட்டு தப்பிச் சென்றார்.
இந்தோனேசிய-அமெரிக்க மாடல் அழகியான மனோஹரா ஒடெலியா, 2008-ஆம் ஆண்டு வெறும் 16 வயதில் மலேசிய இளவரசர் தெங்கு ஃபக்ரியை மணந்தார். இந்த திருமணம் அப்போதே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், திருமணத்திற்கு ஒரு ஆண்டுக்குள் அவர் தனது கணவரால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல் ரீதியான தண்டனைகளை எதிர்கொண்டதாகத் தெரிவித்து, மலேசியாவை விட்டு தப்பிச் சென்றார். 2009-இல், ஒரு அரச குடும்பப் பயணத்தின் போது சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் இருந்து இந்தோனேசியாவுக்கு தப்பி ஓடினார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு, மனோஹரா தனது இன்ஸ்டாகிராம் மூலம் அந்த திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “2008-இல் நடந்த அந்த திருமணம் எனது சம்மதத்துடனோ அல்லது சட்டப்படியோ நடக்கவில்லை. அது ஒரு கட்டாயத் திருமணம். அப்போது நான் ஒரு சிறுமியாக இருந்தேன். கட்டாயத்திலும், சுதந்திரமின்மையிலும் தள்ளப்பட்டிருந்தேன். எனக்கு உண்மையான தேர்வு செய்யும் உரிமையோ, சம்மதம் அளிக்கும் தகுதியோ கூட இல்லை” என்று உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளார்.
மேலும், “பல ஆண்டுகளாக ஊடகங்களில் நான் ‘முன்னாள் மனைவி’ என மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறேன். இந்த விளக்கம் தவறானது மட்டுமல்ல, பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது” என்று தெளிவுபடுத்தி, தனது அனுபவத்தின் உண்மைத் தன்மையை உலகம் அறியும்படி செய்துள்ளார்.
Editorial Staff