தஞ்சையை உலுக்கிய சம்பவம்: கணவர் குறித்து இன்ஸ்டா அட்சயா கூறும் பகீர் தகவல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜா (40) என்பவருக்கும், அவரது மனைவி அட்சயா (35) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். அட்சயா பி.ஏ. படித்தவர். அவருக்கு ஜோஸ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கணவன்-மனைவி இடையே முரண்பாடு அதிகரித்துள்ளது. சம்பவத்தன்று, அட்சயாவும் ஜோசுவும் தனியாக வீட்டில் இருந்ததை அறிந்து அங்கு வந்த தர்மராஜா, கதவைத் தட்டி உள்ளே சென்று வாக்குவாதம் செய்ததும், அங்கிருந்த வாலிபரை அடித்து விரட்டியதும் வீடியோவாகச் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தச் சம்பவத்தில் அட்சயாவின் முகத்தில் கத்தியால் குத்திய தர்மராஜா, தனது மகனையும் அழைத்துச் சென்றார். பின்னர், குழந்தையை போலீசார் மீட்டனர். கொலை முயற்சி வழக்கில் தர்மராஜாவைக் கைது செய்து, குழந்தையை காப்பகத்தில் சேர்த்தனர்.
கத்திக்குத்துக் காயத்திற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அட்சயா, சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கணவர் குறித்துப் பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். "தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ எதுவும் இப்போது எடுத்தது இல்லை; கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது.
இந்த வீடியோவை அவர் தவறாக எதுவும் பயன்படுத்தக் கூடாது, சமூக வலைதளங்களில் பரப்பக் கூடாது என போலீஸ் நிலையத்தில் இருவர் மீதும் புகார் உள்ளது. நான் வேலைக்குச் செல்லக் கூடாது என எனக்கு மொட்டை அடித்தார். மொட்டை அடித்த வழக்கிலும் இந்த வீடியோவைக் காண்பித்து, தனது பக்கம் நியாயம் இருப்பது போல் அனுதாபம் தேடிக்கொண்டார்.
இந்த வீடியோவை அவர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். அவருக்குக் கோபம் வந்துவிட்டால் என்னை அடித்துத் துன்புறுத்துவார். இதனால்தான் ஒரு ஆண்டாக அவரைப் பிரிந்து வாழ்கிறேன். நான் விடுதியில் தங்கியிருந்தபோது வேண்டுமென்றே வந்து என்னிடம் வம்பு இழுத்தார். பக்கத்து அறையில் இருந்தவர்களிடம் வேண்டுமானாலும் பேசச் சொல்கிறேன்.
இப்போது என்னுடன் சேர்ந்து வாழ வருகிறேன் எனக் கூறி, தன்னைத் தானே சிகரெட்டால் சுட்டுக்கொண்டார். நான் வேலைக்குச் சென்றுவிட்டால் என் மகனையும் கொடுமைப்படுத்துவார்" என்று அட்சயா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்தி போலீஸ் விசாரணைகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பேச்சுகளை அடிப்படையாகக் கொண்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பான முழு உண்மைகள் விசாரணைக்குப் பின்னரே அறிய முடியும். நீதித்துறை முடிவுகளே இறுதியானதாகும். குடும்ப வன்முறை தொடர்பான ஏதேனும் உதவிகளுக்கு, உங்கள் பகுதியில் உள்ள பெண்கள் உதவி மையம் அல்லது காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.