பெண் அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி: அரசாங்கம் தீவிர பரிசீலனை

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

பெண் அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி: அரசாங்கம் தீவிர பரிசீலனை

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த யோசனையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மகளிர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, இந்த முன்மொழிவு திறமையானதும், தற்போதைய சூழலில் மிகவும் அவசியமானதுமான ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்டார். ஏனைய தெற்காசிய நாடுகளுடன், குறிப்பாக பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களை அதிகளவில் வேலைவாய்ப்புச் சந்தையில் இணைத்துக்கொள்ள முறையான, நீண்டகால திட்டங்கள் நாட்டிற்கு தேவையெனவும், இந்த யோசனை முற்போக்கான அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சரவை மட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன என்றும், அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி சார்ந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சமிந்ரனி கிரியெல்ல முன்வைத்துள்ளார். பெண்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்படுவதன் மூலம், நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை கணிசமாக உயர்த்த முடியும் என அவர் தெரிவித்தார்.

மேலும், குடும்பப் பொறுப்புகள் காரணமாக பெண்கள் வேலைக்குச் செல்லும் போது எதிர்கொள்ளும் சவால்களை குறைப்பதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் இந்த திட்டம் ஒரு பயனுள்ள தீர்வாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.