உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு: இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா?
உலகளாவிய எண்ணெய் சந்தையில் இன்று (17) மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. ஆசிய சந்தையில் முற்பகல் நிலவரப்படி, Brent ரக மசகு எண்ணெயின் விலை சுமார் 2.8% உயர்ந்து ஒரு பீப்பாய் 103.08 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேபோல் அமெரிக்க மசகு எண்ணெயின் விலையும் சுமார் 3% உயர்ந்து ஒரு பீப்பாய் 96.25 டொலராக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உலக எரிசக்தி சந்தையில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (16) ஹோர்முஸ் நீரிணை வழியாக சில கப்பல்கள் பாதுகாப்பாக பயணித்ததாக வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து எண்ணெய் விலை சற்றளவு குறைந்திருந்தது. ஆனால் இன்றைய வர்த்தகத்தில் மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.
இந்த நீரிணை உலக எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய பாதையாக கருதப்படுவதால், அந்தப் பகுதியில் ஏற்படும் பதற்றம் உலக சந்தையை நேரடியாக பாதிக்கிறது.
வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெய் விநியோகத்தை அதிகமாக நம்பியிருக்கும் நாடுகளில் ஜப்பான் மற்றும் தென்கொரியா முக்கியமானவை. இந்நாடுகளின் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று ஆரம்ப வர்த்தகத்தில் சற்றளவு உயர்வுடன் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், பல நாடுகளில் எரிபொருள் விலைகளிலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதன் விளைவாக இலங்கையிலும் எதிர்காலத்தில் எரிபொருள் விலை தொடர்பாக புதிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.