இலங்கையில் வாகனங்களின் விலைகள் 10 இலட்சம் ரூபாய் வரை கணிசமாகக் குறைவு
இலங்கையில் சிறிய ரக வாகனங்களின் விலைகள் 10 இலட்சம் ரூபாய் வரை கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று முன்தினம் (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே, குறிப்பாக சிறிய ரக வாகனங்களின் விலைகள் குறைந்தபட்சம் 10 இலட்சம் ரூபாயாவது குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
டொயோட்டா யாரிஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசல், சுஸுகி வேகன் ஆர், டைகாட்சு மீரா மற்றும் சுஸுகி வேன்கள் போன்ற நாட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற வாகன வகைகளின் விலைகள் 4 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை சரிவடைந்துள்ளன.
சந்தையில் உள்ள பெரும்பாலான விற்பனையாளர்கள் தற்போது நட்டத்திலேயே வாகனங்களை விற்பனை செய்து வருவதால், வாகனங்களை முன்பதிவு செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் சாதகமான தருணம் என்றும், எதிர்காலத்தில் விலைகள் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய சந்தைச் சூழலால் இந்த விலை குறைவுப் போக்கு தற்காலிகமாகத் தொடர்ந்தாலும், சந்தை மீண்டும் சமநிலையை அடையும் போது வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
சுமார் ஐந்து ஆண்டுகளாக நீடித்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் உருவான பற்றாக்குறை பெருமளவு சீரடைந்திருந்தாலும், தேவையை நிறைவு செய்ய இன்னும் வாகனங்கள் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், நாட்டின் உண்மையான சந்தைத் தேவையை விடவும் அதிகளவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதே தற்போதைய திடீர் விலை வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாகும்.
அத்துடன், அரசாங்கம் விதித்த கூடுதல் கட்டணமும் (surcharge) உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை குறைவுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வழிவகுத்துள்ளது என இந்திக சம்பத் மெரிஞ்சிகே மேலும் தெரிவித்தார்.