நம்மில் பலர் அன்றாட வாழ்க்கையில் கைவிரல் அல்லது கால் விரலின் ஓரங்களில் திடீரென வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலியுடன் சீழ் கட்டுவதை பார்த்திருப்போம். இதற்கு நகசுத்தி (Paronychia) என்று பெயர். சில நேரங்களில், ஒரு விரலை அசைக்கவே முடியாத அளவிற்கு இந்த வலி இருக்கும். இந்த பாதிப்பு ஏன் உருவாகிறது, அதற்கான காரணங்கள் மற்றும் அதில் இருந்து விடுபடும் வழிகள் குறித்து இங்கு காண்போம்.
நகசுத்தி என்பது முக்கியமாக பாக்டீரியா அல்லது ஹெர்பஸ் வைரஸ் போன்ற கிருமித் தொற்றுகளால் நகங்களின் ஓரத்தில் உருவாகும் ஒரு பாதிப்பாகும். குறிப்பாக, நாம் நகங்களைக் கடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தால், வாயின் எச்சிலில் உள்ள கிருமிகள், நகத்தின் அருகே உள்ள மிகச் சிறிய காயங்கள் அல்லது வெடிப்புகள் வழியாக உள்ளே சென்று இந்த தொற்றை உருவாக்குகின்றன. இதுபோலவே, கைகள் அல்லது கால்களை நீண்ட நேரம் ஈரப்பதத்தில் வைத்திருப்பதும், தொடர்ந்து சமையல், பாத்திரம் கழுவுதல், அல்லது துணி துவைக்கும் வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த பிரச்சனை மிகவும் பொதுவானதாகும்.
இந்த தொற்று ஏற்பட்டால், நகத்தைச் சுற்றியுள்ள தோல் சிவந்து வீங்கி, கடுமையான எரிச்சலையும் வலியையும் உண்டாக்கும். பாதிப்பு தீவிரமடையும் போது, நகத்தின் ஓரங்களில் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சீழ் சேரத் தொடங்கும். சிலருக்கு இந்த நரம்பு வலி கை முழுவதும் பரவுவதும், லேசான காய்ச்சல் அறிகுறிகளும் ஏற்படலாம். நகத்தை சுற்றியுள்ள தோல் பகுதியில் இப்படியான மாற்றங்கள் ஏற்பட்டால், அது நகசுத்தி என்று புரிந்துகொள்ளலாம்.
இதற்கான தீர்வுகள் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து அமைகின்றன. ஆரம்ப கட்டங்களில், நாம் வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே இதை நிவர்த்தி செய்யலாம். ஒரு பாரம்பரிய வழிமுறை, எலுமிச்சைப் பழத்தை பாதியாக உடைத்து, அதன் உள்ளே பாதிக்கப்பட்ட விரலை வைத்து ஊறவைப்பதாகும்.
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இயற்கையான கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்றை குறைக்கும். மேலும், வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து, பாதிக்கப்பட்ட விரலை 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைப்பதும் வீக்கம் மற்றும் வலியை கணிசமாக குறைக்க உதவும்.
ஆனால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டு வைத்தியம் செய்தும் வலி குறையாமல், காய்ச்சல் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். குறிப்பாக, நீரிழிவு (சர்க்கரை நோய்) உள்ளவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்; அவர்கள் வீட்டு வைத்தியத்தை தவிர்த்து, மருத்துவ ஆலோசனையை உடனே பெறுவது நல்லது.
மிக முக்கியமான எச்சரிக்கை என்னவென்றால், சீழை வெளியேற்றுவதற்காக ஊசி அல்லது பிற கூரிய பொருட்களைக் கொண்டு நாமே குத்த முயலக்கூடாது. இது தொற்றை மேலும் ஆழமாக பரப்பி, பாதிப்பு கடுமையாக மாறுவதற்கு வழிவகுக்கும். சிகிச்சை தேவைப்பட்டால், அதை திறமையான மருத்துவரே மேற்கொள்ள வேண்டும்.