ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் ஒரே நாடு இதுதான்...

Published on: 27 Jul 2026, 06:38 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

உலகிலேயே ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத ஒரே நாடான பூட்டான் எப்படி போக்குவரத்தை சீராக நிர்வகிக்கிறது? அதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணங்களை அறியுங்கள்.

ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் ஒரே நாடு இதுதான்...

உலகின் பெரும்பாலான நாடுகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த டிராபிக் சிக்னல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பெரிய நகரங்களில் சிக்னல்கள் இல்லாமல் போக்குவரத்தை கற்பனை செய்வதே கடினம். ஆனால், உலகில் ஒரு நாடு மட்டும் இந்த நடைமுறைக்கு விதிவிலக்காக உள்ளது.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் அண்டை நாடான பூட்டான், உலகிலேயே ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத ஒரே இறையாண்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது.

பூட்டானின் தலைநகரான திம்பு நகரில்கூட போக்குவரத்து விளக்குகள் இல்லை. பரபரப்பான சந்திப்புகளில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளுக்கு பதிலாக போக்குவரத்து காவலர்களே கையசைவுகளின் மூலம் வாகனங்களை ஒழுங்குபடுத்துகின்றனர்.

அலங்கரிக்கப்பட்ட சிறிய கட்டமைப்பின் உள்ளே நின்று, வாகனங்களின் இயக்கத்தை காவலர்கள் நேரடியாக கட்டுப்படுத்துவது திம்புவின் தனித்துவமான அடையாளமாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் திம்புவில் டிராபிக் சிக்னல்கள் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவை போக்குவரத்தை எளிதாக்குவதற்கு பதிலாக கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் கருதியுள்ளனர்.

பயிற்சி பெற்ற போக்குவரத்து காவலர்கள் கையசைவுகளின் மூலம் வாகனங்களை ஒழுங்குபடுத்தியபோது போக்குவரத்து மிகவும் சீராக இயங்கியதால், சிக்னல்கள் பின்னர் அகற்றப்பட்டன.

டிராபிக் சிக்னல்களை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் அதிக செலவு தேவைப்படுவது ஒரு காரணமாக இருந்தாலும், அதுவே முக்கிய காரணம் அல்ல.

பூட்டான், வளர்ச்சியை தொழில்நுட்ப வசதிகளால் மட்டுமல்லாமல், மனித மைய அணுகுமுறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரியம் மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் மதிப்பிடும் நாடாகும். இதனால், தேவையற்ற உள்கட்டமைப்புகளை தவிர்க்கும் கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

திம்புவில் முக்கிய சந்திப்புகளில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்கள் பகல், இரவு என மாறி மாறி பணியாற்றுகின்றனர். வெள்ளை கையுறைகளை அணிந்து துல்லியமான கையசைவுகள் மூலம் வாகனங்களை இயக்கும் இவர்களின் பணிமுறை சுற்றுலாப் பயணிகளையும் கவர்கிறது.

இந்த முறையால் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருப்பதுடன், வாகன ஓட்டிகளும் விதிமுறைகளை சிறப்பாக பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

சில சிறிய நகரங்கள் அல்லது கிராமப்புறங்களில் போக்குவரத்து விளக்குகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு முழு நாட்டின் தலைநகரமே டிராபிக் சிக்னல்கள் இல்லாமல் திட்டமிட்டு இயங்கும் நடைமுறையை கடைப்பிடிப்பது பூட்டானில் மட்டுமே உள்ளது என்பதே இதன் சிறப்பு.

பூட்டானின் இந்த தனித்துவமான போக்குவரத்து முறை, உலக நாடுகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் ஒரு சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW