கல்யாணத்துக்கு பிறகும் மறக்க முடியல.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடிகள்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விதுரா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில், திருமணமான காதல் ஜோடி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இருந்த சுபின் மற்றும் மஞ்சு ஆகிய இருவரும், அந்த லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விதுரா கிராமம் இயற்கை அழகு நிறைந்த பகுதியானதால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் பல லாட்ஜ்கள் மற்றும் தங்குமிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபரும் இளம்பெண்ணும் அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
நீண்ட நேரமாகியும் அந்த அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், கதவை தட்டியும் எந்த பதிலும் கிடைக்காத நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை திறந்து பார்த்தபோது, இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மறைமுட்டம் பகுதியை சேர்ந்த சுபின் (28) என்றும், இளம்பெண் ஆரியங்கோடு பகுதியை சேர்ந்த மஞ்சு (31) என்றும் அடையாளம் காணப்பட்டது. இருவரும் முன்பு காதலித்து வந்தவர்கள் என்பதும், பின்னர் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொண்ட பிறகும் தொடர்பில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த உறவு குறித்து இரு குடும்பங்களுக்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, முன்பே இரு குடும்பங்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் இருவரையும் தேடி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவர்கள் லாட்ஜில் மரணமடைந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.