6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சந்தேகநபர் போலீஸாரால் சுட்டுக்கொலை!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மாயமானார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கிராமத்தைச் சேர்ந்த பல்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் பதற்றமடைந்து பல இடங்களில் தேடினர். தகவல் கிடைக்காததால், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக சிறுமியைத் தேடும் பணியைத் தொடங்கினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் காட்சிகளை ஆய்வு செய்தபோது, தில்பட்டா கிராமத்தைச் சேர்ந்த பல்ராஜ் என்பவர் சிறுமியை அழைத்துச் செல்வதும், பின்னர் சாக்குமூட்டையுடன் வயல்வெளியை நோக்கிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இதனையடுத்து, பல்ராஜைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.
பல்ராஜின் தகவலின் பேரில், வயல்வெளியில் தேடியபோது, சாக்குமூட்டைக்குள் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் மரணம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே, சிறுமி கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணக் காரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான உறுதியான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மறைத்து வைத்த கத்தியை மீட்பதற்காக போலீசார் பல்ராஜை அழைத்துச் சென்றனர். அப்போது, தப்பிக்க முயன்ற பல்ராஜ் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பல்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.