வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி மாணவியை ஏமாற்றிய இளைஞர்... வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை
ஆந்திரப் பிரதேசம் திருப்பதி மாவட்டத்தில், பள்ளி மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாக ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு. தலைமறைவான இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் பள்ளி மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, வனப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, விண்ணமாலா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர், மாணவியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், பிரதவாடா கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்கு அவர் அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழியில் சந்தேகமடைந்த மாணவி, ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அவரை மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாணவியை வனப்பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு, மாணவியை மீண்டும் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டருகே இறக்கிவிட்டு, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் நாயுடுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள ராகேஷை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.