டிரம்ப் கண் காட்டிய நொடி! மொத்த வெனிசுலா முழுக்க மின்சாரம் போனது எப்படி? அரண்டு நிற்கும் உலக நாடுகள

பொதுவாக இத்தகைய செயல்பாடுகள் அதி ரகசியமாக இருக்கும்; ஆனால் அதிபர் டிரம்ப் இதை நேரடியாக ஒப்புக்கொண்டது உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டிரம்ப் கண் காட்டிய நொடி! மொத்த வெனிசுலா முழுக்க மின்சாரம் போனது எப்படி? அரண்டு நிற்கும் உலக நாடுகள

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்யும் நடவடிக்கைகளின் போது, வெனிசுலா தலைநகர் காரகாஸில் மின் விநியோகத்தைத் துண்டிப்பதற்கு அமெரிக்கா சைபர் தாக்குதல்கள் அல்லது பிற தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சனிக்கிழமை தெரிவித்தார். இருப்பினும், எந்தக் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதை அவர் வெளிப்படையாக கூறவில்லை.

இந்த நடவடிக்கை உண்மையாக இருந்தால், அமெரிக்காவின் இணையவழி அல்லது சைபர் திறனை வேறொரு நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்திய மிகவும் வெளிப்படையான சந்தர்ப்பங்களில் ஒன்றாகக் கருதப்படும். பொதுவாக இத்தகைய செயல்பாடுகள் அதி ரகசியமாக இருக்கும்; ஆனால் அதிபர் டிரம்ப் இதை நேரடியாக ஒப்புக்கொண்டது உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, உலகளவில் சைபர் மற்றும் இணையவழி போர்த்திறனில் மிகவும் மேம்பட்ட நாடாகத் திகழ்கிறது.

மார்-ஏ-லாகோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: “மொத்தமாக வெனிசுலா நாடு இருளில் மூழ்கியது. எங்களிடம் ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம் உள்ளது. அதன் காரணமாக வெனிசுலா நகரின் விளக்குகள் மொத்தமாக அணைக்கப்பட்டன. அது இருண்டிருந்தது. இதனால் நாங்கள் உள்ளே நுழைந்து எங்கள் ஆபரேஷனை செய்ய முடிந்தது,” என்றார்.

அதே சந்திப்பில், கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் டான் கெய்ன், அமெரிக்க சைபர் அமைப்பு, அமெரிக்க விண்வெளி அமைப்பு மற்றும் போர் கட்டளை அமைப்பு ஆகியவை சனிக்கிழமை அதிகாலையில் இருந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விளக்கினார். “அமெரிக்கப் படைகளுக்கு என்று சிறப்பு வழித்தடத்தை உருவாக்க மின்சாரத்தை துண்டிப்பது, இணையத்தை துண்டிப்பது, மொபைல் கனெக்சனை துண்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டோம்,” என்றார் அவர்.

இதன் மூலம், அமெரிக்க அதிபர் நினைத்தால் எந்த நாட்டின் மின்சாரத்தையும் மொத்தமாக துண்டிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் அத்தகைய சைபர் பலம் இருப்பது இந்த நிகழ்வின் மூலம் தெளிவாகியுள்ளது.

வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும், அமெரிக்கப் படைகளால் காரகாஸில் நடத்தப்பட்ட இரவு நேரத் தாக்குதலில் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிர்வாக (டி.இ.ஏ) தலைமையகத்தில், மதுரோ “குட் நைட், ஹேப்பி நியூ இயர்” என்று அதிகாரிகளை முகம் சிரித்தவாறு வாழ்த்தினார். இந்த கைது உலக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மதுரோவை கைது செய்வதற்காக, அமெரிக்கப் படைகள் நேற்று அவரது காரகாஸ் இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைவர் விலங்கிடப்பட்ட நிலையில், மன்ஹாட்டனில் உள்ள டி.இ.ஏ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தன்னுடன் வந்த அதிகாரிகளுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதுரோவை இரு டி.இ.ஏ அதிகாரிகள் உள்ளே அழைத்துச் செல்லும் காணொளியில் அவர் புன்னகையுடன் வாழ்த்தியுள்ளார்.

நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்டீவார்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவும் அவரது மனைவியும் தரையிறங்கினர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்ஹாட்டன் டி.இ.ஏ அலுவலகத்திற்கும், பின்னர் புரூக்ளினில் உள்ள மெட்ரோபொலிட்டன் தடுப்பு மையத்திற்கும் மாற்றப்பட்டனர். நியூயார்க் வந்தடைந்தவுடன், மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க