பங்களாதேச ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து ; 16 பேர் உயிரிழப்பு

பங்களாதேசத்தில் தொழிற்சாலை விபத்துகள் காரணமாக பேரழிவுகள் ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.

பங்களாதேச ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து ; 16 பேர் உயிரிழப்பு

பங்களாதேச தலைநகர் டாக்காவில் ஆயத்த ஆடை ஆலை மற்றும் ரசாயன கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஆயத்த ஆடை ஆலைக்கு அருகில் உள்ள ரசாயன கிடங்கில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. அது அந்த ஆலைக்கும் பரவியது. தேடுதல் பணிகளின்போது ஆலையின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டன.

உயிரிழந்த அனைவரும் நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஆலையில் இன்னும் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர். பங்களாதேசத்தில் தொழிற்சாலை விபத்துகள் காரணமாக பேரழிவுகள் ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது.

டாக்கா அருகே ஆயத்த ஆடை ஆலையில் 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.