உலகின் அமைதியான நாடாக மீண்டும் ஐஸ்லாந்து முதலிடம்: இந்தியா 12 இடங்கள் சரிவு
உலக அமைதி குறியீட்டில் ஐஸ்லாந்து தொடர்ந்து 19ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா 12 இடங்கள் சரிந்து 127ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
உலக அமைதி குறியீட்டில் (Global Peace Index) தொடர்ந்து 19ஆவது ஆண்டாக ஐஸ்லாந்து முதலிடத்தை தக்கவைத்து, உலகின் மிகவும் அமைதியான நாடாக மீண்டும் தெரிவாகியுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் (Institute for Economics & Peace) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான உலக அமைதி குறியீட்டு அறிக்கையில், உலகின் 163 நாடுகளில் நிலவும் அமைதி, பாதுகாப்பு நிலை, உள்நாட்டு மோதல்கள் மற்றும் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறைந்த குற்றச்செயல் விகிதம், சமூக பாதுகாப்பு மற்றும் நிரந்தர இராணுவம் இல்லாத நிலை ஆகியவை அந்நாட்டின் அமைதியான சூழலுக்கான முக்கிய காரணிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்தியா இந்த ஆண்டுக்கான தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 115ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 127ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. இதன் மூலம் 12 இடங்கள் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவின் தரவரிசை சரிவுக்கு மணிப்பூர் பகுதியில் ஏற்பட்ட இன மோதல்கள், உள்நாட்டு பதற்றங்கள் மற்றும் அண்டை நாடுகளுடனான எல்லை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் நிலவும் மோதல்கள், அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வரும் சூழலில், அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கும் நாடுகள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.