காதலனின் ஆசைக்காக தோழிகளை ஆபாசமாக படம்பிடித்த இளம்பெண் கைது – காதலனுக்கு வலை

நெல்லையில் விடுதியில் தங்கிய தோழிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய இளம்பெண் மகரஜோதி கைது. கோவையில் தலைமறைவான காதலன் கண்ணனையும் கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர்.
காதலனின் ஆசைக்காக தோழிகளை ஆபாசமாக படம்பிடித்த இளம்பெண் கைது – காதலனுக்கு வலை

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பணிபுரியும் பெண்களுக்கான தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்ணின் மிரள வைக்கும் செயல் அம்பலமானது. நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவைச் சேர்ந்த மகர ஜோதி (39) என்ற பெண், கடந்த சில மாதங்களாக தனது குழந்தைகளுடன் அந்த விடுதியில் வசித்து வந்துள்ளார். அவரது சமீபகால நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சக தோழிகள், அவர் தங்களை செல்போனில் ரகசியமாகப் படம்பிடிப்பதாக விடுதி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

விடுதி காப்பாளர் மகரஜோதியின் செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது. மகரஜோதி, விடுதியில் தங்கியிருக்கும் பெண்களை ஆபாசமான கோணங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, கண்ணன் என்ற நபருக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் நாககுமாரி தலைமையிலான போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மகரஜோதியைக் கைது செய்தனர்.

விசாரணையில், கண்ணன் என்பவர் தனது காதலன் என்றும், அவரை மகிழ்விப்பதற்காகவே இப்படிச் செய்ததாகவும் மகரஜோதி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், பல்வேறு கோணங்களில் வீடியோ எடுத்து அனுப்புமாறு காதலனே கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கோவையில் வசிக்கும் கண்ணனைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் கோவைக்கு விரைந்துள்ளனர். அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர