கணவருடன் வீடியோ கால் சண்டை: சென்னையில் சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை - சின்னத்திரையில் சோகம்!

சென்னையில் வசித்து வந்த சின்னத்திரை நடிகை சுபாஷினி, தனது கணவருடன் வீடியோ காலில் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 36 வயதான அவரது இந்த முடிவு சீரியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவருடன் வீடியோ கால் சண்டை: சென்னையில் சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை - சின்னத்திரையில் சோகம்!

சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னத்திரை நடிகை சுபாஷினி (36). இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூரில் வசிக்கும் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்தார்.

படப்பிடிப்பு பணிகளுக்காகச் சென்னையில் தங்கியிருந்த சுபாஷினி, நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், மோதலாக மாறியுள்ளது. இந்த மன உளைச்சலில் இருந்த சுபாஷினி, யாரும் எதிர்பாராத விதமாகத் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை சுபாஷினி சன் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற 'கயல்' உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானவர். சின்னத்திரை மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ள இவர், சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (Twitter) தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தவர், இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தது அவரது சக கலைஞர்களையும் ரசிகர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐயப்பன்தாங்கல் போலீசார், சுபாஷினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது உண்மையாகவே தற்கொலைதானா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கணவர் பிப்பினைச் சென்னைக்கு வரவழைத்துள்ள போலீசார், அவரிடமும் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

முக்கிய அறிவிப்பு: தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது. உங்களுக்கு மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், தயவுசெய்து  உதவி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர