ஹர்திக் பாண்டியா மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்புவது குறித்து கௌதம் கம்பீர் முக்கிய அறிவிப்பு
ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட் அணிக்கு திரும்புவதற்கு முன்னர் தனது உடற்தகுதியை நிரூபிக்க போதிய போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிக்குத் திரும்புவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சர்வதேச போட்டிகளில் களமிறங்குவதற்கு முன்னர் அவர் போதியளவு போட்டிகளில் விளையாடி தனது உடற்தகுதியையும் ஆட்டத்திறனையும் நிரூபிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வளர்ந்து வரும் இளம் சகலதுறை வீரரான நிதீஷ் குமார் ரெட்டியின் வளர்ச்சிக்கும் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், குறிப்பிட்ட சில போட்டிச் சூழல்களில் இரு வீரர்களையும் கூட ஒரே பதினொருவர் கொண்ட அணியில் களமிறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தற்போதைய சூழலில் ஹர்திக் பாண்டியாவால் தொடர்ச்சியாக பத்து ஓவர்கள் பந்துவீச முடியாத நிலை காணப்படுவதாகவும், ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்த பின்னர் அவர் குறிப்பிடத்தக்க அளவில் போட்டிகளில் பங்குபற்றவில்லை எனவும் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு மீண்டும் திரும்புவதற்கு முன்னர் ஹர்திக் பாண்டியா கணிசமான போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி உடற்தகுதியை உறுதிப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என கம்பீர் வலியுறுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வீரர்களின் உடற்தகுதிக்கு அதிகளவிலான சவால்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவரை அவசரப்பட்டு உடனடியாக சர்வதேச களத்தில் இறக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதன் காரணமாக, இந்தியா ‘ஏ’ அணிக்காக முன்னெடுக்கப்படும் தொடர்களில் அவர் விளையாடும் பட்சத்தில், தேவையான போட்டி அனுபவத்தையும் உடற்தகுதியையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதன் பின்னரே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவரை மீண்டும் இணைத்துக்கொள்வது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் கௌதம் கம்பீர் மேலும் தெரிவித்துள்ளார்.