பிரித்தானியாவில் வேகமாக பரவும் சூப்பர் ப்ளூ வைரஸ்; வேலைநிறுத்தம் செய்ய மருத்துவர்கள் திட்டம்: பிரதமர் காட்டம்

Published on: 13 Dec 2025, 09:38 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தற்போது பரவி வரும் ‘சூப்பர் ப்ளூ’ என்பது Influenza வைரஸின் A வகையைச் சேர்ந்த H3N2 துணைப்பிரிவில் ஏற்பட்டுள்ள K எனப்படும் மரபணு மாறுபாடு காரணமாக உருவானதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். 

பிரித்தானியாவில் வேகமாக பரவும் சூப்பர் ப்ளூ வைரஸ்; வேலைநிறுத்தம் செய்ய மருத்துவர்கள் திட்டம்: பிரதமர் காட்டம்

பிரித்தானியா முழுவதும் ப்ளூ தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டிருப்பது பொறுப்பற்ற நடவடிக்கை என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சாடினார். 

நாட்டின் சுகாதார அமைப்பு கடும் அழுத்தத்தில் இருக்கும் நிலையில், அரசு முன்வைத்துள்ள சமரச முன்மொழிவை ஏற்று வேலைநிறுத்தத்தை கைவிடுமாறு, அவர் மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த வாரம் நாளொன்றுக்கு சராசரியாக 2,660 பேர் ப்ளூ தொற்று காரணமாக மருத்துவமனைகளுக்கு வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. 

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது சுமார் 55 சதவிகிதம் அதிகரிப்பாகும். இத்தகைய நிலையில், அடுத்த வாரத்திலிருந்து மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருவது குறித்து அரசு கவலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் தேசிய சுகாதார சேவையான NHS அபாயகரமான நிலையில் செயல்பட்டு வரும் வேளையில், வேலைநிறுத்தம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதகமாக அமையும் என பிரதமர் எச்சரித்துள்ளார். குறைந்தபட்சமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின்னர் வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது பரவி வரும் ‘சூப்பர் ப்ளூ’ என்பது Influenza வைரஸின் A வகையைச் சேர்ந்த H3N2 துணைப்பிரிவில் ஏற்பட்டுள்ள K எனப்படும் மரபணு மாறுபாடு காரணமாக உருவானதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். 

வழக்கமான ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளான அதிக காய்ச்சல், உடல் வலி, இருமல், தலைவலி, தொண்டை வலி, மூக்கடைப்பு, களைப்பு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றுடன் கூட, மூச்சுத்திணறல், மார்பு வலி, குழப்பம், கடும் நீரிழப்பு மற்றும் அறிகுறிகள் திடீரென மோசமாதல் போன்றவை சூப்பர் ப்ளூவில் அதிக கவனத்துக்குரியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டை விட ப்ளூ தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 56 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலைமை இன்னும் மோசமடையலாம் என துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியவும், இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW