எச்-1பி மற்றும் எல்-1 விசா நீட்டிப்புக்கு $4,000 கட்டணம் - அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் அதிரடி; இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிர்ச்சி
அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களின் நீட்டிப்புக்கு அதிக கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய விதி செப்டம்பர் 9 முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாக்களில் தொடர்ச்சியாக கெடுபிடிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களை நீட்டிப்பதற்கு அதிக கட்டணத்தை விதிக்கும் புதிய விதியை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய விதிப்படி, அமெரிக்காவில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில், பாதிக்கும் மேற்பட்டோர் (50% க்கு மேல்) எச்-1பி அல்லது எல்-1 விசாக்களைக் கொண்டவர்களாக இருந்தால், அந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் விசா நீட்டிப்புக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை '50-50 விதி' என்று அழைக்கப்படுகிறது.
இதன்படி, எச்-1பி விசா நீட்டிப்புக்கு $4,000 (சுமார் ரூ.3.80 லட்சம்) மற்றும் எல்-1 விசா நீட்டிப்புக்கு $4,500 (சுமார் ரூ.4.28 லட்சம்) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் விசா பெறுபவரால் அல்ல, மாறாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் செலுத்தப்பட வேண்டும்.
முன்னதாக, இந்த '9/11 Response and Biometric Entry-Exit Fee' என்ற கூடுதல் கட்டணம், எச்-1பி அல்லது எல்-1 விசாவிற்கு முதன்முதலில் விண்ணப்பிக்கும் போதோ அல்லது ஊழியர் பணியிடத்தை மாற்றும் போதோ மட்டுமே செலுத்தப்பட வேண்டியிருந்தது.
ஆனால், புதிய விதிப்படி, அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றும் ஊழியரின் விசா காலத்தை நீட்டிப்பதற்கும் இந்த கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம், வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் நம்பியிருக்கும் நிறுவனங்களின் செலவுகளை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய விதி, வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் அதிக அளவில் எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களைப் பயன்படுத்துவதால், இந்த கட்டண உயர்வு அவற்றுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், அமெரிக்காவில் அதிகளவில் பணிபுரியும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களும் இதன் மறைமுக தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். DHS இந்த விரிவாக்கத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் $157.3 மில்லியன் கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என மதிப்பிட்டுள்ளது.