யாழ்ப்பாணத்தில் முன்னாள் காதலனின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததாக பெண் கைது
யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் தனிப்பட்ட (நிர்வாண) புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படும் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய கணினி பொறியாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் WhatsApp குழுக்களில் பகிரப்பட்டுள்ளதாகவும், இதனை தனது முன்னாள் காதலியே செய்துள்ளதாகவும் கூறி குற்றப் புலனாய்வு திணைக்களம் கீழ் இயங்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், வடக்கு மாகாண குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், குறித்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தது முன்னாள் காதலியே என்பதும் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, சந்தேக நபரும் முறைப்பாட்டாளரும் சுமார் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட பிரிவின் காரணமாக தான் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளானதாகவும், அதனால் பழிவாங்கும் நோக்கில் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.