சட்டவிரோத கருக்கலைப்பு மையம் மீது போலீஸ் அதிரடி; மருத்துவர் கைது – உதவியாளர் மயக்கம்
களுத்துறை பேருவளை பகுதியில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுத்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, புலனாய்வு அதிகாரி ஒருவர் வாடிக்கையாளராக நடித்து கருக்கலைப்புக்காக முன்பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் தேடுதல் அனுமதி பெற்ற சிறப்பு போலீஸ் குழு நேற்று அந்த மையத்தை முற்றுகையிட்டது.
சுற்றிவளைப்பின்போது, மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு கருக்கலைப்பு செய்யத் தயாராக இருந்த தருணத்தில் சந்தேகநபரான மருத்துவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் அதிகளவிலான மருந்துகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் முன்னாள் வைத்திய அதிகாரி என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஒரு கருக்கலைப்புக்காக 45,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அவர் வசூலித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார் அங்கு சென்றதை கண்ட மருத்துவரின் உதவியாளர் அதிர்ச்சியால் மயங்கி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது தவிர்க்க போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் வழங்க முயன்றதாகவும் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
