அசோவ் கடலில் உக்ரைன் அதிரடி டிரோன் தாக்குதல்: 116 ரஷியக் கப்பல்கள் முடக்கம்.. கோதுமை ஏற்றுமதி பாதிப்பால் உலகளவில் தட்டுப்பாடு அபாயம்!
அசோவ் கடலில் உக்ரைன் நடத்திய தீவிர டிரோன் தாக்குதலில் ரஷியாவின் 116 கப்பல்கள் இலக்காக்கப்பட்டன. இதனால் ரஷியாவின் 25 சதவீத கோதுமை ஏற்றுமதி முடங்கி, சர்வதேச சந்தையில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அசோவ் கடல் (Sea of Azov) பகுதியில் உக்ரைன் நடத்திய தொடர் டிரோன் தாக்குதல்களால் ரஷியாவின் கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தக ஏற்றுமதி முற்றிலும் முடங்கியுள்ளது.
அசோவ் கடல் என்பது ரஷியா மற்றும் உக்ரைன் எல்லைகளுக்கு நடுவே அமைந்து, கெர்ச் நீரிணை (Kerch Strait) வழியாகக் கருங்கடலுடன் இணையும் ஒரு முக்கியப் பகுதியாகும். உக்ரைனின் டிரோன் படைப்பிரிவுத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 9 நாட்களில் மட்டும் அசோவ் கடல் பகுதியில் ரஷியாவுக்குச் சொந்தமான 116 கப்பல்களை உக்ரைனிய டிரோன்கள் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கியுள்ளன. இதில் ரஷியாவின் போர்க்கப்பல்கள் மட்டுமின்றி, வர்த்தகச் சரக்குக் கப்பல்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இதன் விளைவாக, டான் அசோவ் கால்வாய் மற்றும் கெர்ச் நீரிணை வழியாகச் செல்லும் ரஷியக் கப்பல்களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதைச் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்துத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஏற்றுமதி முடக்கம்: ரஷியாவின் கச்சா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், எஃகு மற்றும் கோதுமை ஏற்றுமதி இந்த அசோவ் கடல் துறைமுகங்கள் வழியாகவே பெருமளவில் நடைபெறுகின்றன.
கோதுமை தட்டுப்பாடு: சர்வதேச கோதுமைச் சந்தையில் 20% பங்கைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக ரஷியா திகழ்கிறது. ரஷியா தனது நாட்டின் ஒட்டுமொத்த கோதுமை ஏற்றுமதியில் சுமார் 25 சதவீதத்தை இந்த அசோவ் கடல் வழியாகவே உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. தற்போதைய முடக்கத்தால் சர்வதேச சந்தையில் கோதுமையின் விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.
மாற்றுப் பாதை நெருக்கடி: ரஷியா தனது மாற்றுப் பாதையாகக் கருங்கடல் (Black Sea) துறைமுகங்களைப் பயன்படுத்த நினைத்தாலும், தற்போதைய அறுவடைக் காலத்தின் பிரம்மாண்ட ஏற்றுமதியைத் தாங்கும் கொள்ளளவு அந்தத் துறைமுகங்களுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தை ரஷியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து முழுமையாகத் தனிமைப்படுத்துவதும், அசோவ் கடல் வர்த்தகத்தை முடக்கி ரஷியாவின் விநியோகச் சங்கிலியை (Supply Chain) உடைப்பதுமே உக்ரைனின் தற்போதைய முக்கிய வியூகமாகும். 2003-ம் ஆண்டு ஒப்பந்தப்படி இந்த அசோவ் கடலை இரு நாடுகளும் பகிர்ந்து வந்தன. ஆனால், 2014-ல் கிரிமியாவை ரஷியா ஆக்கிரமித்ததில் இருந்து சர்ச்சை நீடித்து, 2022 முழு அளவிலான போருக்குப் பின் இது ரஷியாவுக்குச் சொந்தமான உள்நாட்டுக் கடல் என அதிபர் புதின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.