மார்பக புற்றுநோய் - போதிய சிகிச்சை கிடைக்காமல் 48 வயதில் உயிரிழந்த நடிகை
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை வாஹினி (பத்மக்கா) குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் பலரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்திருந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நோய் தீவிரமடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டதால், மருத்துவச் செலவு மிக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ச்சியான சிகிச்சைக்காக இன்னும் சுமார் 32 லட்சம் ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அளவிலான செலவை அவரது குடும்பத்தினரால் சமாளிக்க முடியாத சூழல் உருவானது. நடிகை கராத்தே கல்யாணி சமூக ஊடகங்களில் உதவி கோரி வெளியிட்ட வேண்டுகோளின் மூலம் ஓரளவு நிதி திரட்டப்பட்டாலும், அது முழுமையான சிகிச்சைக்கு போதுமானதாக இல்லை. இதனைத் தொடர்ந்து, வாஹினி வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை அன்று, நடிகை வாஹினி 48 வயதில் உயிரிழந்தார். இளம் வயதிலேயே அவர் உயிரிழந்தது, திரையுலகத்தினரையும் ரசிகர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. போதிய நிதி மற்றும் மருத்துவ உதவி கிடைக்காததே அவரது மரணத்திற்கு காரணமாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
