“வடிவேலுவுடன் மீண்டும் நடிப்பதற்கு பிச்சையெடுத்து வாழலாம்”: நடிகை சோனா பரபரப்பு குற்றச்சாட்டு!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி மற்றும் துணை கதாப்பாத்திரங்கள் மூலம் கவனம் பெற்ற நடிகை சோனா, சமீபத்தில் அளித்த பேட்டியில் நகைச்சுவை நடிகர் வடிவேலு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சோனா, பின்னர் ஷாஜஹான், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவருக்கு பரவலான கவனத்தை பெற்றுத்தந்தது குசேலன் திரைப்படம். இதில், வடிவேலுவின் மனைவியாக நடித்த அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பேசுபொருளானது.
இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சோனா, வடிவேலு ஒரு திறமையான நகைச்சுவை நடிகர் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அவருடன் பணியாற்றிய அனுபவம் தனக்கு விருப்பமில்லாததாக இருந்ததாக கூறினார். குறிப்பாக ‘குசேலன்’ படப்பிடிப்பு காலத்தில் ஏற்பட்ட அனுபவம் தான் அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க மறுத்ததற்கான முக்கிய காரணம் என தெரிவித்தார்.
அவர் மேலும், அந்தப் படத்திற்குப் பிறகு வந்த 16க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை நிராகரித்ததாகவும், தனது சுயமரியாதை காரணமாகவே அந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார். “எந்த சூழலிலும் மரியாதையை இழந்து பணம் சம்பாதிக்க விரும்பவில்லை” என்ற அவரது கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் குறித்து வடிவேலு தீர்மானிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் பலருக்கும் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளும் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இதற்கு முன்பும், நடிகர் சிங்கமுத்து உள்ளிட்ட சிலர், வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கிடையிலான பணம் மற்றும் வாய்ப்புகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து முன்பும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த சூழலில், சோனாவின் இந்த பேட்டி மீண்டும் பழைய சர்ச்சைகளை கிளப்பியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.