குருநாகல் பாடசாலை கார் தீ விபத்து: 8 வயது சிறுவன் தீ வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தது பொலிஸ்!
குருநாகல் பாடசாலை வளாகத்தில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் தீப்பிடித்த சம்பவத்திற்கும், 8 வயது மாணவனுக்கும் தொடர்பில்லை என ஆதாரங்களை மேற்கோள் காட்டி இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
குருநாகல் பகுதியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்திற்கும், 8 வயது சிறுவனுக்கும் தொடர்பில்லை என்று இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வமாக விளக்கமளித்துள்ளனர். சிறுவன் தீ வைப்பது போன்ற ஆதாரங்கள் எதுவும் விசாரணையில் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 3-ம் திகதி குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், சுமார் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து முழுமையாகச் சேதமடைந்தது. இந்தத் தீ விபத்துக்கு அதே பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது சிறுவன் ஒருவனே காரணம் என காரின் உரிமையாளரால் குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாகச் சமூக ஊடகங்களிலும் ஒரு காணொளி பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
சமூக ஊடகங்களில் பரவும் காணொளியில் காணப்படும் சிறுவன், சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வாகனத்திற்கு அருகில் நடந்து சென்றுள்ளான் என்பது உண்மைதான். ஆனால், அந்தச் சிறுவன் தான் வாகனத்திற்குத் தீ வைத்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு நேரடிச் சாட்சியமோ அல்லது தடயவியல் (Forensic) ஆதாரங்களோ இதுவரை கிடைக்கவில்லை.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். தீ விபத்துக்கான துல்லியமான காரணத்தை அறிவியல் மற்றும் நிபுணத்துவ ரீதியாகக் கண்டறிவதற்காக, அரசாங்க பகுப்பாய்வாளரின் (Government Analyst) உதவியும் கோரப்பட்டுள்ளது.