ஈராக்கில் பெண் எம்.பி வீட்டில் அதிர்ச்சி சோதனை: கோடிக்கணக்கான பணம், தங்கப் பொருட்கள் பறிமுதல்
ஈராக்கில் ஊழல் விசாரணையின் போது பெண் எம்.பி வீட்டில் இருந்து பில்லியன் தினார் ரொக்கம், தங்கப் பொருட்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்.
ஈராக்கில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து பெருமளவிலான ரொக்கப் பணம் மற்றும் மதிப்புமிக்க தங்கப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊழல் மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பாக்தாத்தின் பாதுகாப்பு மண்டலத்திற்குள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிறப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது கணக்கில் காட்டப்படாத பெருமளவிலான பணம், தங்கம் உள்ளிட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக் உச்ச நீதிமன்றத்தின் தகவலின்படி, 98 பில்லியனுக்கும் அதிகமான ஈராக்கிய தினார் மற்றும் சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர் ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல இடங்களில் பணம் மற்றும் தங்கப் பொருட்கள் வீடுகளின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், சில இடங்களில் அவற்றை மீட்க கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் விநியோக விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அலி மாரிஜ் அல் பஹத்லியின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பில்லியன் கணக்கான ஈராக்கிய தினார், அமெரிக்க டொலர்கள், தங்க ரோலக்ஸ் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் ஆலியா நசீஃபின் இல்லத்தில் இருந்து 20 பில்லியன் ஈராக்கிய தினார்களுக்கு மேற்பட்ட பணம் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட உள்ளாடை உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சில வீடுகளில் தண்ணீர் கொள்கலன்களில் பெருமளவிலான பணம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஆரம்ப கட்ட விசாரணை மட்டுமே என்றும், மேலும் பலர் சந்தேக பட்டியலில் இருப்பதால் அடுத்த கட்ட கைது நடவடிக்கைகள் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனைகள், ஈராக்கில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.