"அந்த மெசேஜை பார்த்ததும் ஷாக் ஆயிட்டேன்!" - ஏ.ஆர்.ரகுமானால் நெகிழ்ந்த நடிகை ஷர்வரி
ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து வந்த எதிர்பாராத பாராட்டு மெசேஜ் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக பாலிவுட் நடிகை ஷர்வரி தெரிவித்துள்ளார். புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம் தற்போது கவனம் பெற்று வருகிறது.
பாலிவுட் நடிகை ஷர்வரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து எதிர்பாராத விதமாக வந்த ஒரு மெசேஜ் தன்னை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியதாக பகிர்ந்துள்ளார்.
நடிகை ஷர்வரி தற்போது இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மேயின் வாபஸ் ஆவுங்கா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, ஷர்வரியின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஷர்வரி, ஏ.ஆர்.ரகுமானுடன் நடந்த மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் சார் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். படத்திற்காக நான் செய்த பணியை அவர் மிகவும் பாராட்டியிருந்தார். அவரிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டு வரும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அந்த மெசேஜை பார்த்ததும் உண்மையிலேயே ஷாக் ஆயிட்டேன்," என்றார்.
மேலும், "அவருடைய பாராட்டு எனக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை என்பதையும், அவருடைய இசையை எவ்வளவு விரும்புகிறேன் என்பதையும் நீண்ட பதிலாக அவருக்கு அனுப்பினேன். ஒரு கட்டுரை போலவே என் பதில் இருந்தது," என்று சிரித்தபடி தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரகுமானின் பாராட்டு தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக இருக்கும் என்றும் ஷர்வரி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.