இரவில் நிம்மதியாக உறங்க வேண்டுமா? இந்த 9 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீர்கள்!
நிம்மதியான இரவு உறக்கத்திற்கு உணவு மிகவும் முக்கியம். ஆரஞ்சு, தக்காளி, ப்ரோக்கோலி, டார்க் சாக்லெட், பாதாம், முந்திரி, தயிர், அதிக மசாலா உணவுகள் உள்ளிட்ட 9 வகை உணவுகள் இரவில் சாப்பிட்டால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, வயிறு கனமாதல், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இரவு நேர உணவு, உங்கள் உறக்கத்தின் தரத்தை நேரடியாக பாதிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். ஆரோக்கியமான சில உணவுகள் கூட இரவில் உட்கொள்ளும்போது உடலுக்கு போதிய ஓய்வை அளிக்காமல், தூக்கத்தை சீர்குலைத்து, வயிறு கனமாதல், வாயுத்தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சில உணவுகள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைத்து தூக்கமின்மைக்கு காரணமாக அமைகின்றன; மற்றவை செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் இரவு முழுவதும் உடல் ஓய்வெடுக்க முடியாமல் தவிக்கும். அத்தகைய உணவுகளை பற்றியும், அவற்றை இரவில் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதும் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றாலும், இதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இரவில் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சினைகளை தூண்டும். எனவே, படுக்கைக்கு செல்லும் முன் இதை தவிர்ப்பது நல்லது.
தக்காளி
தக்காளியில் சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் மிகுந்துள்ளன. இரவு உணவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ் அல்லது அதிக அளவு தக்காளி கொண்ட உணவுகளை சேர்த்துக்கொண்டால், வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர்
இவை இரண்டும் உடல் நலத்திற்கு சிறந்த காய்கறிகள் என்றாலும், அவற்றில் நார்ச்சத்து அதிகம். இரவில் இவற்றை சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். கனமான உணர்வு தூக்கத்தையும் பாதிக்கும்.
டார்க் சாக்லெட்
டார்க் சாக்லெட்டில் காஃபின் மற்றும் தியோப்ரோமின் உள்ளிட்ட தூண்டும் பொருட்கள் உள்ளன. இவை மூளையை விழித்திருக்க செய்யும் ஆற்றல் கொண்டவை. இரவில் இதை சாப்பிடுவது உங்கள் உறக்க சுழற்சியை சீர்குலைத்து, தூக்கம் வருவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
பாதாம் மற்றும் முந்திரி
பாதாம், முந்திரி ஆகியவை ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. ஆனால், இரவில் இவற்றை அதிகளவில் சாப்பிடும்போது, செரிமான அமைப்பு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இது வயிற்றை கனமாக உணரவைத்து, நிம்மதியான உறக்கத்திற்கு இடையூறாக மாறும்.
தயிர்
கோடை காலத்திற்கு ஏற்ற உணவு தயிர் என்றாலும், இரவில் இதை உட்கொள்வது சிலருக்கு வயிறு உப்புசம் மற்றும் அசிடிட்டியை அதிகப்படுத்தும். குறிப்பாக, செரிமான மண்டலம் உணர்திறன்மிக்கதாக (சென்சிட்டிவ் ஸ்டொமக்) இருப்பவர்கள் இரவில் தயிரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
அதிக மசாலா பொருட்கள்
இரவு உணவில் அதிகப்படியான மசாலா பொருட்களை சேர்த்து சாப்பிடுவது வயிற்று எரிச்சலை அதிகரித்து, நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கும். இது செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்து, இரவில் நிம்மதியாக உறங்கும் திறனையும் பாதிக்கும்.
கார்பனேட்டட் பானங்கள்
சர்க்கரை மற்றும் கார்பன் டை ஆக்சைடு கொண்ட குளிர்பானங்கள் வயிற்றில் குமுறல் மற்றும் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். இரவில் இவற்றை உட்கொள்வது செரிமானத்தை மெதுவாக்கி, உறக்கத்தை சீர்குலைக்கும்.
காஃபின் நிறைந்த பானங்கள்
காபி, டீ, எனர்ஜி பானங்கள் போன்றவற்றில் காஃபின் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை தூண்டி, தூக்கத்தை தாமதப்படுத்தும். எனவே, படுக்கைக்கு முந்தைய 6-8 மணி நேரத்திற்குள் இவற்றை தவிர்ப்பது அவசியம்.
சிறந்த இரவு உணவு எப்படி இருக்க வேண்டும்?
நிம்மதியான உறக்கத்திற்கு, இரவு உணவு இலகுவாகவும், சீக்கிரம் செரிமானமாகக்கூடியதாகவும் இருக்க வேண்டும். படுக்கைக்கு குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்பே உணவை முடித்துவிடுவது நல்லது. வெதுவெதுப்பான பால், வாழைப்பழம், ஓட்ஸ் போன்றவை தூக்கத்தை ஊக்குவிக்கும் உணவுகளாகும்.