சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிக விலகல்: கயாடு லோஹர் அறிவிப்பு - மன ஓய்வுதான் காரணம்!
'டிராகன்' புகழ் நடிகை கயாடு லோஹர், மன ஓய்வுக்காக சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். தன்னுடனும், நிஜ வாழ்க்கையுடனும் அதிக நேரம் செலவிட விரும்புவதாகக் கூறிய அவர், விரைவில் மீண்டும் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
'முகில்பேட்டை' படத்தின் மூலம் கன்னடத் திரைப்பட உலகில் அறிமுகமான நடிகை கயாடு லோஹர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த 'பள்ளிச்சட்டம்பி' படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அவர் சமூக ஊடகங்களில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள கயாடு லோஹர், "சமூக ஊடகங்களிலிருந்து சிறிது காலம் விலகி இருக்கிறேன். சில நேரங்களில் உடலுக்கு ஓய்வு தேவைப்படுவது போல, மனதிற்கும் ஓய்வு அவசியம். வாழ்க்கையின் வேகத்தைச் சற்றுக் குறைத்து, திரைக்கு அப்பால் உள்ள நிஜ வாழ்க்கையுடனும், என்னுடனும் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் அவர் மேலும் கூறுகையில், "எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து, அன்பையும் ஊக்கத்தையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை. நான் சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருக்கமாட்டேன். இருப்பினும், முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருந்தால், எனது குழுவினர் இந்தக் கணக்கின் மூலம் பகிர்வார்கள். அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், அன்பும் கிடைக்கட்டும். விரைவில் மீண்டும் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கயாடு லோஹரின் இந்தப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த முடிவுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்து, அவர் விரைவில் மீண்டும் சமூக ஊடகங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.