புரட்டி எடுக்கும் புயல் - நிவாரண முகாமாக மாறும் இலங்கை கிரிக்கெட் மைதானம்
இலங்கை கடலோரத்தை ஒட்டிய பகுதியில் உருவான டிட்வா புயலின் காரணமாக வானிலை தீவிரமடைந்து, பல மாவட்டங்களில் அதி கனமழை கொட்டியதால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இலங்கையை கடந்த சில நாட்களாக கடும் மழை தாக்கி வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகள் முற்றிலும் தடுமாறியுள்ளன. இலங்கை கடலோரத்தை ஒட்டிய பகுதியில் உருவான டிட்வா புயலின் காரணமாக வானிலை தீவிரமடைந்து, பல மாவட்டங்களில் அதி கனமழை கொட்டியதால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, 14 பேர் காயமடைந்துள்ளதுடன், 20 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர். பாதிப்பு அதிகரித்ததால், சில அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த கடுமையான சூழ்நிலையில் கொழும்பில் உள்ள பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானம் அவசர நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட சுமார் 3,000 மக்கள் தற்காலிகமாக இங்கு தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான அடிப்படை உணவு, தங்கும் வசதி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட உள்ளன.
Editorial Staff