மயானத்தில் இடம்பெற்ற மர்ம சடங்கு: இரண்டு பெண்கள் கைது – கிராம மக்கள் அச்சம்
பொலன்னறுவை பகமூன பகுதியில் உள்ள மயானத்தில் மர்ம சடங்கு நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பொலன்னறுவை – பகமூன பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மர்மமான சடங்கு தொடர்பில் இரண்டு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள கல்லறை ஒன்றின் அருகே மனித உருவங்களை ஒத்த களிமண் உருவங்கள் வைக்கப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் சில செயற்பாடுகள் இடம்பெற்றதை அவதானித்த கிராம மக்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, சந்தேகத்திற்குரிய இரண்டு பெண்கள் அங்கு இருந்ததாகவும், கல்லறை பகுதியில் சேதங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், சில இடங்களில் குழிகள் தோண்டப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களுடன் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஹிங்குரகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் எனவும், மற்றையவர் பகமூன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லறை சேதப்படுத்தப்பட்டமை தொடர்பாகவும், தனியார் மற்றும் பொது மயானங்கள் தொடர்பான சட்டத்தின் கீழும் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பெண்கள் முன்னரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக சில பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளதுடன், இதனால் தங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.