ஸ்பெயினில் நடந்த வல்லடாய்ட் அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜோஸ் ஸோரில்லா மைதானத்தில் நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் – வல்லடாய்ட் அணிகள் மோதின. காயத்தில் இருந்து மீண்டு வந்த நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா இந்தப் போட்டியில் களமிறங்கினார்.
பரபரப்பாக ஆரம்பித்த இந்தப் போட்டியில் வல்லடாய்ட் அணி வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்ததால், முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
அதன் பின்னர் இரண்டாம் பாதியின் 83வது நிமிடத்தில் வல்லடாய்ட் வீரர் ஹேண்ட்பால் பவுல் செய்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பென்சிமா, பந்தை அபாரமாக வலைக்குள் தள்ளினார். அடுத்த 5 நிமிடத்தில் புயல்வேகத்தில் செயல்பட்ட பென்சிமா மீண்டும் ஒரு கோல் (89வது நிமிடம்) அடித்தார்.
கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வல்லடாய்ட் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் வல்லடாய்ட் அணி வீரர் செர்ஜியோ லியோன் சிவப்பு அட்டை (82வது நிமிடம்) பெற்று வெளியேற்றப்பட்டார்.
பென்சிமா அடித்த இரண்டு கோல்களையும் சேர்த்து, ரியல் மாட்ரிட் அணிக்காக அவரது கோல்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.