நடிகை குஷ்பு 90 காலகட்டத்தில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர். அப்போது இருந்த இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் என்று கூட சொல்லலாம்.
தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போதும் சினிமாவில் இயங்கி வருகிறார். சின்னதிரையிலும் கால்பதித்த குஷ்பு அங்கும் பிரபலமாக இருந்து வருகிறார்.
இதனிடையே அரசியல் பக்கம் தனது வாழ்க்கையைத் திருப்பிய நடிகை குஷ்பு, பல கட்சிகளில் பயணம் செய்தார். ஒரு கட்டத்தில் பாஜக கட்சியில் இணைந்த அவர், தற்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் சின்னத்தம்பி படம் குறித்தான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்தம்பி படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பலர் பிரபுவிடம் சென்று படத்திற்கு சின்னத்தம்பி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். ஆனால் படத்தின் கிளைமாக்ஸில் அவள்தான் சின்னத்தாயாக மாறுவது போல இருக்கிறது.
படம் அந்த பெண்ணின் மீது மாற வேண்டாம் படத்தின் கதாநாயகன் நீ தானே. ஆகையால் அந்தக்காட்சியை மாற்றி விடுங்கள் என்று பிரபுவிடம் சொன்னார்கள்.
ஆனால் பிரபு கேட்கவே இல்லை; படத்தின் வெற்றிதான் முக்கியம் என்று அவர் பிடிவாதமாக இருந்தார். பொண்ணு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாள். அந்த பாட்டால் படம் ஓடுகிறது என்றால் அது போதும் என்று சொன்னார்.
சின்னத்தம்பி படத்தில் நான் நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை; அப்படி ஒரு வரவேற்பு. உண்மையில் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு என்னுடைய சகோதரர் வந்திருந்தார்.
தூரத்தில் நான் ஒரு காட்சியை நடித்துக் கொண்டிருந்தேன். அதை பார்த்த அவர் என்னிடம் வந்து இந்த படத்திற்கு உனக்கு விருது கூட கிடைக்கலாம் என்று சொல்லிச் சென்றார்.
படம் வெளியான பிறகு எங்கு பார்த்தாலும் என்னை நந்தினி நந்தினி என்று அழைத்தார்கள். ரசிகர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரத்தத்தில் கடிதங்களை எழுதி அனுப்புவார்கள். போட் கிளப் வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். சாலைகளில் பேருந்துகள் வரிசைக்கட்டி நிற்கும்.
படத்தின் வெற்றியை ஒவ்வொரு ஊராக சென்று கொண்டாடிக் கொண்டிருந்தோம். மதுரைக்கும் சென்றிருந்தோம் விமானத்திலிருந்து கீழே இறங்கும் பொழுது பலர் என்னுடைய போட்டோ அடங்கிய கொடியை வைத்துக் கொண்டு வாழ்க என்று சொன்னார்கள்.
அப்போது எனக்கு தமிழ் தெரியாது. என்ன இவர்கள் திட்டுகிறார்கள் என்று நினைத்து விட்டு நான் விமான நிலையத்திற்குள் ஓடி விட்டேன். அதன் பின்னர் விவரத்தை சொல்லி அழைத்து வந்தார்கள்” என்றார்