ஐசிசி சாம்பியன்ஸ் ஃடிராபி தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறும் அணி என்ற மோசமான சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மற்றும் துபாயில் இப்போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. கராச்சியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான், நியூசிலாந்து அணியுடன் மோதியது. இதில் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றது.
இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு, நேற்று நடைபெறவிருந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள இருந்தது.ஆனால் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டு, இரண்டு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இரண்டு போட்டிகளில் தோல்வி, முற்றிலும் கைவிடப்பட்ட ஒரு ஆட்டம் என தகுதிச்சுற்று போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே எஞ்சியதால், அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
அத்துடன், ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை நடத்தும் நாடு என்ற வகையில், புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம்பிடித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை பாகிஸ்தான் அணி படைத்துள்ளது. இத்தொடரில் ஒரேயொரு புள்ளி மற்றும் -1.087 ரன் ரேட் விகிதத்துடன் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
மேலும் ஒட்டுமொத்தமாக, இத்தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் வெளியேறும் இரண்டாவது அணி என்ற சாதனையையும் பாகிஸ்தான் படைத்துள்ளது. முன்னதாக, கடந்த 2000 ஆம் ஆண்டில் கென்யா அணி மோசமான இந்த சாதனையை படைத்திருந்தது.
அத்துடன் நடப்பு சாம்பியன் என்ற முறையிலும், தகுதிச் சுற்று போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பெறாமல் வெளியேறும் இரண்டாவது அணி என்ற பெயரையும் பாகிஸ்தான் பெற்றுள்ளது. முன்னதாக, 2009 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா, 2013இல் நடைபெற்ற தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியேறியது.