பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பான அமைச்சரவை அறிவித்தல்
தோட்டத்துறையில் காணப்படும் சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைத்தல்
மலையக சமூகத்தவர்களுக்கு மிகவும் பயன்வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் தோட்டத்துறையில் காணப்படும் சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தல் மிகவும் பொருத்தமானதாக அமையும் என அடையாளங் காணப்பட்டுள்ளது.
அது தொடர்பாகப் பின்பற்ற வேண்டிய பொறிமுறைகள் தொடர்பாக பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையில், குறித்த ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய, தோட்டத்துறையில் காணப்படும் 450 சுகாதார நிறுவனங்களில் முதற் கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு ஒப்படைப்பதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.