களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தனியார் வகுப்பு ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வாக்குமூலம் வழங்குவதற்காக களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுக்கப்பட்ட 16 வீடியோ பதிவுகள் தெரியவந்துள்ளதாகவும், அவர்களை அவதானித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் களுத்துறை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
களுத்துறை வடக்கு காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகத்திற்குரிய ஆசிரியர் வேறு இடங்களில் சிறு குழுக்களாக வகுப்புகளை நடத்தி அங்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சந்தேகத்திற்குரிய ஆசிரியருக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாக அவரது மனைவி களுத்துறை வடக்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், சந்தேகநபரின் மடிக்கணினியை சோதித்த போது சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் வீடியோ காட்சிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை அவதானித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முறைப்பாடு செய்ய முன்வரத் தயக்கம் காட்டுவதாகவும், அவ்வாறான சிறுமிகள் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கோருகின்றனர்.