ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாகச் செயற்பட்டு வரும் அனைத்து நிலையங்களையும் ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆயுர்வேதம் என்ற பெயரில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வரும் அனைத்து மசாஜ் நிலையங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சர்வதேசத்தை நோக்கி சுதேச மருத்துவம்” என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி ஊடக மையத்தினால் இன்று (09) நடத்தப்பட்ட வீடியோ தொழில்நுட்பத்தினூடான ஊடகச் சந்திப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுற்றுலாத் துறையை இலக்கு வைத்து, பயிற்சி பெற்ற ஆயுர்வேத மசாஜ் தெரபிஸ்ட்டுகளுக்கு தேசிய தொழில் தகுதிச் சான்றிதழ் (NVQ) வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எதிர்வரும் காலங்களில், மூலிகைத் தோட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் சுகாதார மையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊடகச் சந்திப்பில், ஆயுர்வேத ஆணையாளர் கலாநிதி எம்.டீ.ஜே.அபேகுணவர்தன, ஆயுர்வேத பொதுச் சுகாதார வைத்தியர் உதார அத்தபத்து ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.